அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை பிரேசில் அதிபர் ஐ.நாவில் உரை

“அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது” என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில் தெரிவித்தார்.

ஐ.நா சபையில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர், “அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குதர்க்க வாதம் செய்கிறார்கள் என்றார் பிரேசில் அதிபர்.

“அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது” என்று கூறினார் பொல்சனாரூ.

பொல்சனாரூ அரசு அமேசான் காட்டை பாதுகாக்கத் தவறிவிட்டது. காட்டழிப்பை ஊக்குவிக்கிறது என சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் அவர் இவ்வாறாக உரையாற்றி உள்ளார்.

சர்வதேச ஊடகங்களையும் பொல்சனாரூ ஐ.நாவில் குற்றஞ்சாட்டினார்.

“பரபரப்பான செய்தி தருவதற்காகப் பொய்யான செய்திகளைச் சர்வதேச ஊடகங்கள் தந்துவிட்டன. எங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, ஊடகங்களின் இந்த புரட்டுகளை எடுத்துக் கொண்டு காலனித்துவ மனநிலையில் சில நாடுகள் நடந்து கொண்டன” என்று கூறினார்.

பூர்வுகுடிகளை தம் அரசு சரியாக நடத்துவதாக சயீர் பொல்சனாரூ குறிப்பிட்டார்.

“பிரேசில் உள்ளேயும், வெளியேயும் உள்ள சிலர், பிரேசலிய இந்தியர்களைக் குகை மனிதர்களாகவே கருதுகிறார்கள். அந்த நிலையிலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்” என்றார்.

சில அந்நிய சக்திகள் தங்கள் சொந்த நலனுக்காக பூர்வகுடி தலைவர்களைத் தவறாக வழிநடத்துகிறது என்றார்.