அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் ட்ரம்ப் உறுதி

எதிர்வரும் அமெரிக்கத் தேர்தலில் மீண்டும் தான் வெற்றி பெறுவது உறுதி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகின்றார்.

உலகளவில் அமெரிக்காவிலேயே கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறி விட்டதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது ஜோ பிடனுக்கு தேர்தலில் ஆதரவு கிடைக்க வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தல் மிக முக்கியமானது என்றும், அதில் மீண்டும் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் சிறந்ததாக அடுத்த ஆண்டு இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தங்கள் அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “என்னால் மீண்டும் அதிபராக வர முடியும் என நம்புகின்றேன். 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியை சந்தித்தது போல மீண்டும் நடக்கும். சில கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். நாட்டின் பொருளாதார்தை உயர்த்துவேன். தேர்தல் சமயத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெற்றி பெறுவோம்” என்றும் கூறினார்.