அமெரிக்கா, இந்தியாவுக்கு செல்வதால் தீர்வு வருமா? கூட்டமைப்பிடம் அமைச்சர் தினேஷ் கேள்வி

கூட்டமைப்பிடம் அமைச்சர் தினேஷ் கேள்வி
“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதே எமது அரசின் திட்டம். அதைவிடுத்து அமெரிக்காவையும், இந்தியாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடுவதால் தீர்வு கிடைக்கப் போவதில்லை.”என தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூட்டமைப்பிடம் அமைச்சர் தினேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியா செல்லவுள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு மக்கள் ஆணையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இருக்கின்றார்; பிரதமர் இருக்கின்றார். அதுமட்டுமன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசு உள்ளது. இந்த மூன்று தரப்பினரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் நினைத்த மாதிரிச் செயற்படுகின்றனர்.

அவர்கள் வெளியகத் தீர்வை விரும்புகின்றனர். அதனால்தான் அவர்கள் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஓடித் திரிகின்றனர்.

உள்நாட்டுப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வே அவசியம். அதைவிடுத்து வெளியகத் தீர்வைப் பெற முயற்சிப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad அமெரிக்கா, இந்தியாவுக்கு செல்வதால் தீர்வு வருமா? கூட்டமைப்பிடம் அமைச்சர் தினேஷ் கேள்வி