அமெரிக்காவில் கோத்தபயாவிற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன

அமெரிக்க நீதிமன்றில் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த 11பேரும் தாங்கள் வழக்குகளை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

கோத்தபயாவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு உள்ள உரிமையை பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி என்ற பதவியிலுள்ள கோத்தபயா, தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி வழக்கிலிருந்து விடுபடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த வழக்கு குறித்து உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவிக்கையில்,

கோத்தபயா ராஜபக்ஸ இப்போது குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பலாம். ஆனால், அவர் எப்போதுமே ஜனாதிபதியாக இருக்க மாட்டார். ஒருநாள் அவரும் அவருக்கு உதவியவர்களும் பொறுப்புக்கூறும் நிலை ஏற்படும். இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

வழக்கு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றால், உரியவர்கள் யார் என்பது தெளிவாகிவிடும். இந்நடவடிக்கையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் உள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஹவுஸ்பீல்ட் எல்எல்பி என்ற அமைப்புடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த ஏப்பிரலில் கலிபோர்னியா நீதிமன்றில் றோய் சமாதானம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் ஜுன் மாதம் இரண்டு சிங்களவர்கள் உட்பட பத்துப்பேர் கோத்தபயாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றில் சித்திரவதையால் பாதிக்கப்படடவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு கோத்தபயாவின் வழக்கு குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டன என்றும் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

மேலும், மனித உரிமை சட்டத்தரணியான ஸ்கொட் கில்மோர் தெரிவிக்கையில், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளிற்கு கோத்தபயா ராஜபக்வே காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை எங்கள் கட்சிக்காரர்கள் சமர்ப்பித்துள்ளனர். அவர் சர்வதேச சட்டங்களின் கீழ் ஒருநாள் இதற்கு பதிலளிப்பார் எனவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஜனாதிபதியாக இருக்கும் கோத்தபயா ராஜபக்ஸ, எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புக் கூறுமாறு கோருவதை தடுக்க முடியாது என்றும் கூறினார்.