Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் 5 இலட்சம் பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் 5 இலட்சம் பேர் பலி

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையைவிட  கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.

2-ம் உலகப்போரில் அமெரிக்காவில் 4.05 இலட்சம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி அமெரிக்காவில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். அடுத்த 5 நாட்களுக்கு அமெரிக்க தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இது  குறித்து அதிபர் பைடன் கூறுகையில், “கொரோனா உயிரிழப்பைத் தடுக்க மிகவும் முயன்று வருகிறோம். இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஒவ்வொருவரின் உயிரும் காக்கப்பட வேண்டும்”  என்றார்.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதமே கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளன. தடுப்பூசிக்குப் பின் அமெரிக்காவில் உயிரிழப்பு குறையக்கூடும் என்றும் வரும் ஜூன் மாதம் முடிவில் அமெரிக்காவில் 5.89 இலட்சம் பேர்வரை உயிரிழக்கக் கூடும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகளவில் 112,263,225 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம்  2,485,386 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version