அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்கும்; மஹிந்தவைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது என அமெரிக்கத் தூதுவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு தான் வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்தார் எனவும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்குத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆதரவை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையின் வலுவான இறையான்மை குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பிலும் இரு தரப்பிடையே கலந்துரையாடப் பட்டுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவையும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சந்தித்துப் பேசியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன மீண்டும் நியமிக்கப்படுள்ளமை குறித்து அமெரிக்க தூதுவர் தனது வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.