Tamil News
Home செய்திகள் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் – தமிழர் மரபுரிமைப்...

அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள் விளைபுலங்கள் வன்கவர்வு செய்யப்பட்டு தமிழர் மரபில் அந்நிலங்களிற்கு வழங்கப்பட்டு வந்த காரண இடுகுறி பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள புனை பெயர்கள் இடப்பட்டு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழரின் இனப்பரம்பல் கோலம் இன விகிதாசாரம் என்பவை திட்டமிடப்படடு சிதைக்கப்படுகின்றன.

தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில் தமிழினம் தவிக்கின்றது.

தமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்தாது அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகியுள்ளது.

அரசியல் கைதிகள் கேட்பாரற்று தசாப்தங்கள் கடந்தும் சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் 931 நாட்களைக் கடந்துவிட்ட போதும் காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில் இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றிற்கு உட்படுத்தப்பட்டு தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில் மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு வரிதாக்கப்பட்டு விடும் என்பது அரசியல் பொது .வெளியில் அனைவராலும் உணரப்பட்ட போதிலும் ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்தம் ஆறப்போடல்கள், இளுத்தடிப்புக்கள் உடன் கடந்து போயிற்று.

எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழினம் வீழ்ந்து விடாது விழ விழ எழும் என்பதை சிங்கள பேரினவாத சக்திகளிற்கு உணர்த்தவும். தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும்!” என்றுள்ளது.

Exit mobile version