அது ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

‘விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலத்தில் ஒரு புதிய சமூகத்தையும் கட்டியெழுப்பினார்கள் அவர்கள் உருவாக்கிய புதிய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் ஒரு போரையும் நடத்த வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது.’

மெல்பேர்ன்-அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற “Structures of Tamil Eelam: A Handbook” நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே அவுஸ்ரேலிய சோசலிசஸ்ட் கட்சியின் சூ போல்டன் (Sue Bolton) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது உரை பின்வருமாறு,

அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மண்ணில், அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மண்ணில் நின்று பேசும் நாம், இது அவர்களின் நிலம் என்பதை முதலில் அறிவித்தே எனது பேச்சை தொடங்குகிறேன்.

விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை. இந்நூலில் விபரிக்கப்படும் பல செயற்பாடுகளை படிக்கும் பொழுது, குர்திஸ் மக்களால் வடக்கு சிரியாவில் உள்ள ரோஜாவா என்றும் இடத்தில் கட்டியெழுப்பப்படும் குர்டிஸ் அரசும் இதுவும் ஒத்திருப்பதை பார்க்கிறேன்.

விடுதலைக்கான போராட்டம் வெறுமனே இராணுவப் போராட்டமல்ல. அது அடக்கு முறைகளைக் களையும் ஒரு புதுச்சமுதாய உருவாக்கம் என்பதை இந்நூல் எமக்கு சொல்கிறது. முன்னர் பேசிய ஒருவர் குறிப்பிட்டதைப் போல, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலத்தில் ஒரு புதிய சமூகத்தையும் கட்டியெழுப்பினார்கள். அவர்கள் உருவாக்கிய புதிய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் ஒரு போரையும் நடத்த வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது. போரை அனுபவிக்காத என்னைப் போன்றவர்களுக்கு இதை கற்பனை செய்வதும் கடினமே.

தமிழர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து மக்களையும் சென்றடையக்கூடிய, அதாவது போராளிகளுக்கு மட்டுமல்லாத, வைத்திய சேவை இதில் ஒன்று. அனைத்துமக்களுக்குமான  வைத்தியசேவை அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டு வருவதை இப்போ நாம் பார்க்கிறோம். ஐ-அமெரிக்காவில் இன்னும் இம்மாதிரியான ஒரு சேவை இல்லை.

உலகின் வேறு சில இடங்களில் பெண் உரிமைகள் வென்றெடுக்கப்படும் முன்னரே தமிழ் அரசின் கீழ் இவை வென்றெடுக்கப்பட்டுள்ளன. சாதிய பழக்கங்களை அழிக்கவும் தமிழ் அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் முக்கியமான முன்னேற்றங்கள் என்றே நான் நினைக்கிறேன், ஆனால் இந்நூல் தமிழ் அரசின் பரந்துபட்ட செயற்பாடுகளை, விவசாயம், விஞ்ஞானம், வர்த்தகம் போன்ற பல துறைகளில் தமிழ் அரசின் நடைமுறைகளை விபரிக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர்களின் ஆட்சியிலிருக்கும் காலத்தில், மெல்பேர்னில் இருக்கும் எனது தமிழ் நண்பர் ஒருவர் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு சென்று அங்கு தமிழ் அரசினால் உருவாக்கப்பட்ட பல புரட்சிகர சமூக செயற்பாடுகளை கண்டு வந்தார். அச்செயல்களால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய பிள்ளைகளும் வந்து அவற்றை பார்க்காததை நினைத்து வருந்தினார். நான் அதனை ஓர் நடைமுறை அரசாகவே கருதவில்லை, அந்தக்காலகட்டத்தில் அதை தமிழர் பகுதிகளின் அரசாங்கமாகவே நான் கருதுகிறேன்.

சிட்னி வாழ் தமிழரான அனா பரராஜசிங்கம் இந்நூலைப் பற்றி தெரிவித்த கருத்தில், விடுதலைப் புலிகளின் ஒரு மிகவும் முக்கியமான வளர்ச்சியாக இந்த புது அரசின் உருவாக்கம் உள்ளதாக கூறியிருக்கிறார். நானும் இதனை ஆமோதிக்கிறேன். ஆனால் தமிழ் அரசின் உருவாக்கம் ஒரு மிக மிக முக்கியமான நகர்வு அதுவும் 2004ல் நிகழ்ந்த ஆழிப்பேரலையின்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேரவேண்டிய நிதி உதவிகளை இலங்கை அரசாங்கம் தடுத்தபொழுது, உண்மையாக தமிழ் அரசு தான் அந்த உதவிகளைத் தமிழர் பிரதேசங்களாகிய வடக்குக்கிழக்குகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் அங்கு வாழ்ந்த மற்றைய மக்களுக்கும் வழங்கினார்கள்.

இந்நூல் வெளியீட்டை ஒழுங்கு செய்த இளைஞர்களுக்கும், இந்த நூலுருவாக்கத்திற்காக ஆவணங்களை ஒன்றுசேர்க்க உழைத்த இளைஞர்ளுக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ் செயற்பாட்டாளர்களும் இலங்கையில் தமிழர் பகுதிகளிலிருந்த தமிழ் மக்களும் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தீர்கள்.

2009க்குப் பின்னராக காலத்தில் போராட்டத்தை மீளக்கட்டி எழுப்புவதில் ஈடுபட்டிருக்கிறீர்கள்.  போராட்டத்தில் மூழ்கியிருக்கும் பொழுது பலவற்றையும் ஆவணப்படுத்த மாட்டீர்கள். இதனால் போராட்டம் சார்ந்த அறிவு தொலைந்து போகிறது. விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பப்பட்ட அரசு ஒரு சில விடயங்களை மட்டும் செய்யவில்லை. பரந்துபட்ட பல செயற்பாடுகளை செய்தார்கள். தமிழ் அரசின் உருவாக்க அனுபவம் சார்ந்த பல நூல்களின் வெளிவருவதற்கு இந்நூல் முதற்படியாக இருக்கும்.

இந்த நூல் வெளியீடு செஞ்சோலைப் படுகொலையின் நினைவாக நடத்தப்படுவது ஒரு மிகவும் பொருத்தமான செயலாக நான் கருதுகிறேன். அந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவிக்க விரும்புகின்றேன் அதுவும் அவர்களின் முகங்களைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த பள்ளியிலிருந்த இளைஞர்கள், இந்த கற்றல் நிலையத்திலிருந்த இளைஞர்கள், தமிழ் அரசில் தமிழர்களால் அப்பகுதிகளில் நிறுவப்பட்ட அபிவிருத்திகளின் வெளிப்பாடாக அமைகின்றனர்.

நான் சோலிஸ்ட் அலயன்ஸ் கட்சியிலிருந்து வருகிறேன். தமிழரின் போராட்டத்தில் எமக்கு மிக மிக நீண்ட காலமாக ஆதரவுடன்கூடிய ஆர்வம் இருந்து வருகிறது. இந்த ஆதரவு, சோலிஸ்ட் அலயன்ஸ் உருவாக்கத்தையும் முந்திய ஒன்று. அதாவது இவ்வமைப்பின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்த ஒரு முன்னாள் சோசலிச அமைப்புக் காலத்திலிருந்து நாம் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவும் கூட்டொருமையையும் வழங்கியிருக்கிறோம். எமது செய்தித்தாள்களில் தமிழர் போராட்டத்தைப் பற்றி எழுதி வந்திருக்கிறோம்.

இப்போது போராட்டம் ஒரு புதிய பரிமாணமாக நடைபெறுகிறது. அதற்கும் எமது ஆதரவையும் கூட்டொருமையையும் நீட்டுவோம். கைதிகளின் விடுதலைக்கான போராட்டமும் தமிழர் உரிமைக்கான இன்னும் பல போராட்டங்களும் இடம்பெற வேண்டியிருக்கும் இக்காலத்தில்,  எமது செய்தித்தாளிலும் இப்போராட்டத்தினைப் பற்றி நாம் பிரசுரித்து வருகிறோம்..

இந்நூல் மிகவும் முக்கியமானது – தமிழ்ச்சமூகத்தினருக்கு மட்டுமின்றி, வேறு பல அடக்குமுறைக்குட்பட்ட தேசங்களுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் முக்கியமானதொன்றாகும். விடுதலை என்பதை எவ்வாறு அணுகுவதென்று சிந்திக்கும் மக்களுக்கு, ஓர் எதிர்கால சோசலிச சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் அமைகின்றது. வெகுசனப் போராட்டம் மட்டுமின்றி, அதிலிருந்து வெளிவரும்பொழுது, எவ்வாறான சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது.

இவ்வாறான கேள்விகளை ஒரு குறிப்பிட்ட ஆய்வினூடாக, அதாவது தமிழர்களால் சாதிக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்தும் ஆய்வினூடாக, இந்நூல் முன்வைக்கின்றது என நான் நினைக்கின்றேன். தமிழர்கள் ஒரு மிகப்பெரிய விடயத்தினை வடக்குக்கிழக்குகளில் அவர்களது தமிழ் அரசினூடாகச் சாதித்திருக்கிறார்கள். ஒரு சுதந்திரத் தமிழீழத்தினூடாக இதனை மீண்டும் காண நான் ஆவலுடனிருக்கிறேன்.

நன்றி