ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளிடையே ஏற்பட்ட போர் தொடர்கின்றது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராக தொடங்கிய போரை இஸ்ரேல் அப்படியே மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையச் செய்தது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹவுத்திக்கள் என்று தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில்,“ஹவுத்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் இந்த நாளில் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ்களை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். இன்னும் அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தலையைத் துண்டிப்போம்.
ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்கிவிட்டோம். சிரியாவில் ஆசாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டோம். தீவிரவாத அச்ச ரேகைக்கு பெரிய அடி கொடுத்துள்ளோம். அதேபோல் ஏமனில் உள்ள ஹவுத்திகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம். ஹவுத்திகளின் உட்கட்டமைப்பு உத்திகளை தவிடுபொடியாக்குவோம். செங்கடலில் சரக்கு கப்பல்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடி தருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.