Home ஆய்வுகள்   வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா

  வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா

இலங்கை முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெய்த மழை,மக்களுக்கு பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திச் ஏற்படுத்தியுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த மழை காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக   மட்டக்களப்பு கருதப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டமானது நிலப்பரப்பினை விட நீர்நிலைகள் கூடிய பகுதியாக காணப்படுகின்றது.மழை காலங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்படுகின்றது.இதனால் பெரும்பாலான பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்படும் நிலையேற்படுகின்றது.குறிப்பாகபடுவான்கரை பகுதிக்கான போக்குவரத்துகள் பெருமளவில் துண்டிக்கப்படுகிறது.IMG 7248   வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு - கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் படுவான்கரை,எழுவான்கரையென இரண்டு பகுதிகளாக மட்டக்களப்பு வாவியினால் பிரிக்கப்படுகின்றது.படுவான்கரை பகுதியானது பெருமளவில் விவசாயிகளையும் சாதாரண தொழிலாளர்களையும் அதிகமாக கொண்ட பகுதி.இப்பகுதிகளில் விவசாயம், மழை காலங்களில் முற்றாகபாதிக்கப்படுவதுடன் விவசாயிகள்  விவசாயிகள் பாரியளவில் பொருண்மிய  இழப்புக்களையும் எதிர்கொள்கின்றனர்.அத்துடன் தொழிலாளர்களும் தொழிலுக்கு செல்லமுடியாத நிலையேற்படுகின்றது.

இவ்வாறான நிலையில், கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாகமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர் ஏந்தும் நீர் நிலைகளானநவகிரி,புலுக்குனாவை,உன்னிச்சை கித்துள்,வாகனேரி ஆகிய குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டமையினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையேற்பட்டது.குறிப்பாக ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்துகள் பாதிப்பு

கடும் மழை காரணமாக பல பகுதிகளின் தரை வழி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர்-வெல்லாவெளி வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான படுவான்கரை போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.அதேபோன்று  இராணமடு-மாலையர்கட்டு பாலத்தின் ஊடாக வெள்ளம் பாய்ந்ததன் காரணமாக சின்னவத்தை உட்பட பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

அத்துடன் கிரானுக்கும் புலிபாய்ந்தகல்லுக்கும் இடையில் வெள்ள நீர் பாய்ந்ததன் காரணமாக  ஊலாகாடு,இலுக்குவெட்டை,பொண்டுகள்சேனை,ஈரளகுளம்,,முருத்தானை,பெரியவெட்டுவான்,பெருமாவெளி உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன.வடமுனை ஊத்துச் சேனைக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதிக்கான போக்குவரத்துகளை எதிர்கொள்வதில் மக்கள் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டனர்.

கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதியதும் குறிப்பிடத்தக்கது இதே போன்று சித்தாண்டி,ஈரலக்குளம் வீதிக்கும் இயந்திரப்படகுகள் மூலமே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தங்கல் முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக மாவட்டத்தின் 12 பிரதேச செயலகபிரிவுகளை சார்ந்த 19263 குடும்பங்களின் 66736 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6696 குடும்பங்களைச் சேர்ந்த 22614 பேர் இடம்பெயர்ந்த நிலையில் எட்டு இடைத்தங்கல்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலே 02 இடைத்தங்கல் முகாம்களும்,மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிலே 01  இடைத்தங்கல் முகாமும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலே 01  இடைத்தங்கல் முகாமும், ஏறாவூர்பற்று செங்கலடி  பிரதேச செயலக பிரிவிலே 4 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

வீடுகள் பாதிப்பு

வெள்ள நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 73வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்தது..இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 27 வீடுகளும் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 18 வீடுகளும் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

விவசாயம் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் விவசாயமே பெருமளவான மக்களின் ஜீவனோபாய தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது.சிறுபோக செய்கைபண்ணப்பட்டு சில தினங்களிலேயே மழை பெய்து பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் பாரிய பொருண்மிய  இழப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் முற்றாக அழிவுற்றுள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.எனினும் மாவட்ட விவசாய திணைக்களம் அது தொடர்பான தரவுகளை தற்போது சேகரித்துவருவதாகவும் அது தொடர்பான புள்ளவிபரங்கள் கிடைக்கப்பெற்றதுடன் முழு தகவல்களும் வழங்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாஙக் அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

 இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள்

இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்த மக்களுக்கு உடனடியாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள்  செய்து கொடுக்கப்பட்டதாகவும்   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.அத்துடன் தற்போது வெள்ள நீர் வடிந்துவருவதன் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்கு ஆரம்பித்துள்ளதால்    அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை

அரச நிறுவனங்கள்,அரசார்பற்ற நிறுவனங்கள்,  மற்றும் பொது அமைப்புகளை இணைத்து,மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ள காலத்தில் அதிகாரிகள் செயற்பாடு – மக்கள் குறைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் உள்ள கிராம சேவையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போரதீவுப்பற்று,கிரான்,வாகரை,மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சில கிராம சேவையாளர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு சரியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகள் மக்களினால் முன்வைக்கப்படுகின்றன.

வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில் முகாம்களுக்கு சென்றபோதிலும் அவர்களை முகாம்களுக்குள் ஏற்றுக்கொள்ளாத நிலையும் இருந்ததாகவும் சில பகுதிகளில் கிராம சேவையாளர்கள் சரியான இடைத்தங்கல் முகாம்களை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களைவிட பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அவர்கள் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லையென்பதுடன் அவர்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சில அதிகாரிகள் தாம் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டபோதிலும் தம்மை வந்து பார்வையிட்டு தமக்கான உதவிகளை வழங்க தவறியதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

 

 

Exit mobile version