வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை ஏற்றிச்செல்ல வந்த பேருந்துகளையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈஸ்வரிபுரம் கிராமத்திலும் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

DSC04492 வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

இந்நிலையில் கிராம மக்கள் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்பவர்களாலேயே தமது கிராமத்திற்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக தெரிவித்து தமது கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில் இருந்து வருகை தந்தவர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.எனினும் மக்கள் உடன்பாட்டுக்கு வராத நிலையில் ஈச்சங்குளம்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன் வேலைக்கு செல்வதனை எவரும் மறிக்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து வந்தவர்கள் கிராம மக்களை ஆடைத்தொழிற்சாலைக்கு வருகை தந்து மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு கோரியதுடன் நாளையில் இருந்து அனைவரையும் பணிக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர்.

DSC04501 வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

கடந்த வாரம் ஆடைத்தொழிற்சாலைக்கு ஏற்றிச் சென்றிருந்த பேருந்து மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.