வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை

வட, கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட, கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளில் அத்துமீறி செயற்பட்டு அவற்றை பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினைவாத மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.

இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.
அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத ஸ்தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதுமாகும். இதனை அவ்வாறான இடங்களுக்கு செல்லும் பக்தர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம் என்று வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.