வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள்  வீதி மறியல் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள்  வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளன.

இதையடுத்து நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேர், தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது  அவர்களது போராட்டம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்து இன்றைய தினம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து  வருகின்றது.

இந்நிலையில், இன்று முற்பகல் அவர்கள் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.