வடக்குக்கு 11ஆயிரத்து 80 கொரோனா தடுப்பூசிகள் – ஏற்றும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் மூலம் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்கு 11 ஆயிரத்து 80 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளன என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று முதல் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 மருந்துகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 மருந்துகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 மருந்துகளும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 மருந்துகளும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 தடுப்பூசி மருந்துகளும் கோரப்பட்ட நிலையில் அவை முழுமையாக சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் தடுப்பூசி கோரப்பட்ட நிலையில், அவை தனித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.