வடகிழக்கு மக்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் நான் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதுடன் வடகிழக்கு மாகாணம் தனித்தனியாக விசேட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக அபிவிருத்தி அடைந்த பகுதியாக மாற்றப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வடகிழக்கில் தனித்தனியாக சர்வதேச நிதி மாநாடுகளை நடாத்தி இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக்கூட்டம் மட்டக்களப்பு களுதாவளையில் இன்று பகல் நடைபெற்றது.
பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான மனோகணேசன்,தயாகமகே,ரிசாத் பதியூதீன்,முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ரோகித போகொல்லாகம, கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியம் இந்துக்குருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்த நாட்டில் வீடில்லா பிரச்சினைகள் முற்றாக நீக்கப்படும் என சஜித்பிரேமதாச இங்கு தெரிவித்தார்.வடகிழக்கில் ஒரு டிஜிட்டல் யுகம் தமது காலத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இந்த நாட்டில் இனவாதம் மதவாதத்தினை ஒழித்து இனவாதம் மதவாம் இல்லாத ஒரு இளம் சமூகத்தினைக்கொண்ட நாடாக இலங்கையினை மாற்றுவேன்.
ஒருபோதும் மீண்டும் இந்த நாட்டில் கடத்தல்,கொலை கலாசாரம், போதைப்பொருள் கடத்தல்களை அனுமதிக்கமாட்டேன் எனவும் இதன்போது சஜித் தெரிவித்தார்.