றொபேட் பயஸிற்கு 30 நாட்கள் பரோல் – உயர் நீதிமன்றம் அனுமதி  

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7பேரில் ஒருவரான றொபேட் பயஸிற்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் 7பேரில் றொபேட் பயஸும் ஒருவராவார். நெதர்லாந்தில் வசித்து வரும் தனது மகனான தமிழ்க்கோவின் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரின் மனு  சிறைத்துறையால் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் றொபேட் பயஸ் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அதில், பரோல் கேட்டு தான் சிறைத்துறையிடம் விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் சிறைத்துறை அந்த மனு தொடர்பாக பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், றொபேட் பயஸிற்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பரோலில் சென்ற நளினிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும்படி உயர்நீதிமன்றம் றொபேட் பயஸிற்கு அறிவுறுத்தியுள்ளது.