ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள்- மீட்குமாறு சிறிதரன் எம்பி கோரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது

யாழ்ப்பாணத்திலிருந்து பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல முயற்சித்த இளைஞர் குழுவொன்று ரஷ்ய இராணுவத்தினரால் உக்ரைன் எல்லையில் கட்டாய போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

முகவர் ஊடாக அவர்கள் ரஷ்ய இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்

இதேவேளை இந்த விடயம் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்திருந்தது

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தமது பிள்ளைகளை மீட்டு தருமாறு வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.