Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் 29 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 644 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவரும், சிறைச்சாலையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தனியார் வங்கி ஊழியர் ஒருவரும், நட்சத்திர விடுதிப் பணியாளர் ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். ஏனைய மூவரும் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள். சாவகச்சேரி வைத்தியசாலையில் ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். வவுனியா வைத்தியசாலை தனிமைப் படுத்தல் விடுதியில் ஒருவருக்கும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கும், மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Exit mobile version