யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 71 வயது வயோதிபர் மரணம்

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்றுத் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைககழக மருத்துவபீட ஆய்வுகூடம் என இரண்டிலும் 761 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்றுள்ளமைகண்டறியப்பட்டது. இவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள். மற்றொருவர் யாழ்ப்பாணம் மாநகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.

இதேவேளை, வவுனியா பொதுவைத்தியசாலை விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 71 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருக்கு கொரோனா நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வசித்து வந்தவர் என அறிக்கையிடப்பட்டுள்ளது