Tamil News
Home செய்திகள் மைத்திரி அமைக்கும் சிறப்புப் படை – சிங்களக் கட்சிகள் சந்தேகம்

மைத்திரி அமைக்கும் சிறப்புப் படை – சிங்களக் கட்சிகள் சந்தேகம்

அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிக்கவும் எதிர்கொள்ளவும் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த சிறப்பு கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த சிறப்புப் பிரிவிற்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.படைகளின் தளபதியாக இருந்த இவர், இந்தப் புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறிலங்கா முப்படையைச் சேர்ந்த சுமார் நூற்றிற்கும் அதிகமான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் மதிப்பீடுகளைச் செய்வதற்கும், எதிர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரிவிற்கான அரச வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதனிடையே சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் அண்மிக்கும் நிலையில் மைத்திரிபால சிறீசேன புதிய படைப் பிரிவு ஒன்றை தனது கண்காணிப்பின் கீழ் அமைத்துவருவது ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்காவில் ரணில் – மைத்திரி மோல்கள் மேலும் உக்கிரமடைந்து வரும் நிலையில் மைத்திரிபால சிறீசேன புதிய படைப்பிரிவை அமைத்து வருகின்றார். சிறீலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவு கோத்தபாய ராஜபக்சாவிற்கு விசுவாசமான படைப்பிரிவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version