மேலதிக அரசாங்க அதிபர் உட்பட 21 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத் தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்குக் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.