Tamil News
Home உலகச் செய்திகள் ‘மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு’ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

‘மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு’ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகத் தவறாகக் காட்டியதற்காக இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதியை, ஜம்மு காஷ்மீருடன் இருப்பதாக காட்டிய ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேலும் கடந்த மாதம், ‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு, இச்சம்பவத்திற்காக ட்விட்டரை வன்மையாகக் கண்டித்தது. அப்போது, இதை தேசத்துரோகம் என்று கூறி, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து ஒரு எழுத்துப்பூர்வ விளக்கத்தையும் கோரியிருந்தது.

இந்நிலையில்,“மென்பொருள் கோளாறு மற்றும் தவறான தரவுகளின் காரணமாக இந்தப் பிழை ஏற்பட்டுள்ளது” என்று டேமியன் கரியன் கூறியதாக  தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த சில வாரங்களாக, ஜியோ-டேக்கை சரி செய்ய நாங்கள் பணிபுரிந்துவருகிறோம். ஆகையால், லே மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற நகரங்களும் அதன் மாநிலத்தின் பெயர்களும் துல்லியமாகக் காண்பிக்கப்படும்” என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version