Tamil News
Home உலகச் செய்திகள் “மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்”: தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை

“மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்”: தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020” “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை – உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை – ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version