12.05.2019 அன்று கனடாவில் நடைபெற்ற ஈகுருவி நைற் என்ற நிகழ்வில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈகுருவி நைற் என நடைபெற்ற நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வை நினைவு கூரும் நிகழ்வாக அமைந்தது. இந் நிகழ்வில் காலையில் வன்னி இறுதிப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்களின் இறுதிப் போர்க்கால அனுபவங்கள் அடங்கிய. Kass Ghayouri என்பவரால் எழுதப்பட்ட ”A note from no fire zone” என்னும் நூல் வெளியிடப்பட்டது.
இந் நூல் வெளியீட்டின் போது, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர்கள் கைகளில் அரிக்கன் விளக்குகளை (Hurricane Lamp) சபையோர் ஊடாக எடுத்து வந்தனர். இது மருத்துவர் வரதராஜன் அவர்கள் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவ சேவை வழங்கியதை நினைவு கூர்வதற்காகவேயாகும்.
போரின் இறுதிக் காலகட்டத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது, பெரிய கிடாரங்களில் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அந்தப் பகுதி மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற உதவியது. இந்த நிகழ்வை நினைவு கூர்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்தோருக்கு, அறுசுவை உணவிற்குப் பதிலாக கஞ்சியே வழங்கப்பட்டது.
நாம் பட்ட துயரங்களை மறக்காமல் இருப்பதற்காகவும், இதை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிப்பதற்குமாகவே இது மேற்கொள்ளப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு கூரும் நிகழ்வில் இந்த ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” ஒரு நினைவு சின்னமாக விளங்கட்டும்.