Tamil News
Home செய்திகள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்: உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்: உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்த உறுதியேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது.

புலிகளுக்கு எதிராக 22 நாடுகள்

மேதகு பிரபாகரன் தலைமையிலான புலிப்படையினரைப் பயங்கரவாத அமைப்பினர் என முத்திரை குத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தைத் தீட்டி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற ஏராளமான நாடுகளின் உதவியோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றினர். ஏறத்தாழ 22 நாடுகள் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளுக்கு எதிராக நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அதில் பங்கேற்றன. அதாவது, அரசு சார்பில்லாதவொரு மக்கள் அமைப்புக்கு எதிராக, 22 அரசுகள் அனைத்து வகையான படை வலிமையுடன் போர்க் களத்தில் மோதின. போர் மரபுகள் எதனையும் பின்பற்றாமல் நச்சுக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசி, புலிகள் அல்லாத பொது மக்களையும் அழித்தொழித்தனர். இது பங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் ஏகாதிபத்திய நாடுகளால் அரங்கேற்றப்பட்ட இனஅழிப்புப் போராகும்.

புலிகள் இயக்கம் மீது பயங்கரவாத முத்திரை

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இனவிடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக பயங்கரவாத இயக்கமென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதற்குப் புலிகளுக்கு எதிரான இந்த உத்தியே சிங்களவர்களுக்கு மிகப் பெருமளவில் கை  கொடுத்தது.

இந்தியா, அமெரிக்கா

அமெரிக்க இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாத ஒழிப்பை முன்னிறுத்தி உலக நாடுகளை ஒருங்கிணைப்பது அமெரிக்காவுக்கு இலகுவாக அமைந்து விட்டது. அதுவே சிங்களவர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்கள் என்னும் பெயரில் இந்திய ஆட்சியாளர்கள், சிங்களவர்களுக்குத் துணையாக தோள் கொடுத்து நின்றனர். அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன.

ஐ.நா. தவறிவிட்டது

ஈழத்தமிழர் சிக்கலானது, சர்வதேச சமூகத்தின் பிடிக்குள் போய் விட்டதால், ஐநா பேரவையும் அந்தப் பேரவலத்தைக் கடைசி வரையில் வேடிக்கை பார்க்கவே செய்தது. குறிப்பாக, ஐநா மனித உரிமை அமைப்பு அந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த தவறி விட்டது. இனக் கொலைக் குற்றவாளிகளான இராஜபக்‌ச கும்பலை சர்வதேக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்துத் தண்டிப்பதற்கு இதுநாள் வரையிலும் ஐநா பேரவை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிங்கள அரசின் நட்பைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்நிலையில்,சர்வதேசக் குற்றவாளிகளான இராஜபக்‌ச கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால் ஈழத்தமிழர்களின் தாயகத்தை அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களக் குடியேற்றம் போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அத்துடன், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களைச் சிங்களப் படையினர் தகர்த்தெறிந்துள்ளனர். இன அழித்தொழிப்பு மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டச் சுவடுகளை அழிப்பதிலும் குறியாக உள்ளனர்.

உலகத் தமிழர் ஒற்றுமை

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இத்தகைய மேலாதிக்கப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவு கூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கு இடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறுதி ஏற்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version