Tamil News
Home செய்திகள் மியன்மாருக்கு இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐ.தே. க. வலியுறுத்தல்

மியன்மாருக்கு இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐ.தே. க. வலியுறுத்தல்

BIMSTEC மாநாட்டிற்கு வருகை தர திட்டமிட்டுள்ள மியன்மார் தூதுக்குழுவிடம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் மீண்டும் ஆட்சியை கையளிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் எடுத்துரைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மியன்மாருடன் கொண்டிருக்கும் நல்லுறவைப் பயன்படுத்தி, நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளை உடனடியாக நிறுத்தவும் அதிகாரத்தை மீண்டும் கையளிக்கவும் அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தேரவாத புத்தமதத்தை கடைபிடிக்கும் ஒரு தேசத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மியான்மாரில் நடந்து வரும் வன்முறைகளையும் ஜனநாயகத்தை அடக்குவதையும் ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைவராக இலங்கைக்கு சர்வதேச கடமைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, மியான்மார் தூதுக்குழுவிடம் தனிப்பட்ட முறையில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version