Home செய்திகள் ‘மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

‘மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயலாதனின் ‘மழலையும் மறக்குமா’ என்ற கவிதைநூல் வெளியீடு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.

இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார் விஜயலாதன். முடங்கிக் கிடக்காமல் முயற்சியினால் இன்று பல்கலைக்கழக மாணவராக, விளையாட்டு வீரராக, பல்துறைக் கலைஞராக பரிணமித்து நிற்கிறார்.

மீண்டும் பெறமுடியாத விழிப்புலனை எமக்காக இழந்த இந்த இளைஞன், தனது கண்களால் அன்று பதிவுசெய்த காட்சிகளை, தமிழினம் சுமந்த பெரும் துயரங்களை, ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, வரலாற்றின் நேரடிச் சாட்சியாக இருந்து இன்று எழுத்தில் வடித்திருக்கிறார்.

இந்த வேறுபட்ட தொரு நூல்வெளியீட்டு நிகழ்வு புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் இ.இ. வசீகரன் தலைமையில் இடம்பெற்றது. அவரின் தலைமை உரையைத் தொடர்ந்து, வெளியீட்டு உரையினை போராளிப் படைப்பாளி வெற்றிச்செல்வி நிகழ்த்தினார்.நூலுக்கான ஆய்வுரையை ஆசிரியரும் கவிஞருமான
திரு.கை. சரவணன் வழங்கினார்.

தொடர்ந்து நூலினை கேணல் . இளங்கோவின் தாயார் புனிதவதி அம்மா வெளியிட்டு வைக்க, அதன் முதல் பிரதியை நாட்டுப்பற்றாளர் அமரர் கருணானந்தசிவம் அவர்களின் பாரியார் கலாவதி கருணானந்தசிவம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் அவையிலே சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.80263448 1679470858850036 1184885016295899136 n 'மழலையும் மறக்குமா'-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

இக்கவிதை நூலை விழிப்புல வலுவிழந்த மாற்றுத்திறனாளிகளும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கவிஞரால் ஒலி வடிவில் இறுவட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது. அதனை கலாநிதி சி.ரகுராம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

வாழ்த்துரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைநெறிகளுக்கான தலைவர் கலாநிதி சி. ரகுராம், புதிய வாழ்வு நிறுவன பெண்கள் இணைப்பாளர் செல்வி. ச. சுஜிதா மேரி ஆகியோர் வழங்கினர்

வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் சிறப்பு மாணவி செல்வி. மந்தாகினி நிகழ்த்தினார். மற்றும் விருந்தினர்களாக கலந்துகொண்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.கிரிசாந்தன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் N. திவாகர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் S.பபில் ராஜ், இரண்டாம் வருட கலைப்பீட மாணவன் நிரூபன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.

வரலாற்றை முதற்தர பட்டறிவோடு பதிவுசெய்யும் இந்த இளம் படைப்பாளியின் முயற்சிக்கு யாழ் பல்கலைக்க சமூகம் உறுதுணையாய் இருந்தமை வரவேற்கத் தக்கதொரு முன்மாதிரியாகும். இந்த நூல் வெளிவர துணைநின்ற அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்களே.

Exit mobile version