மன்னாரில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.  இதன்படி, தமக்கு வாக்களித்தால் தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
‘இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய காரணமாக இருந்தனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர்’.
‘ஆனால் இன்று மக்களை ஏமாற்றி மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘இனவாதத்தை தூண்டும் தேசிய மக்கள் சக்தி, தமிழ் கட்சிகள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.