மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகணங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் இன்று மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், இது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் கேட்டால் அவர்கள் தங்களை தாக்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள்,விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதை தடுக்க முடியாதுள்ளதாக குற்றம் சாட்டும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள், தமது பிரச்சிணை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவணம் எடுக்க வேண்டும் எனவும் கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியால் இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.