மட்டக்களப்பு கோட்டைப்பூங்காபகுதியில் மாநகர சபையினால் மரங்கள் அழிப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று  இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்து குறித்த பகுதியை பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையினால் மரம்வெட்டுவதற்கு அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய வகையில் மாநகரசபையின் ஆணையாளரினால் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டார்.

இதேநேரம் குறித்த பகுதியிலுள்ள இயற்கை தோனா பகுதியையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மாநகரசபை முன்னெடுத்துள்ளதாகவும் கழிவு குப்பைகளை கொட்டி அவற்றினை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவற்றினையும் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் இளைஞர்கள் இங்கு கோரிக்கை முன்வைத்தனர்.