Tamil News
Home செய்திகள் மங்களராமய விகாராதிபதி, மக்கள் மத்தியில் இனக்கலவரத்தினைத் தூண்ட முயற்சி

மங்களராமய விகாராதிபதி, மக்கள் மத்தியில் இனக்கலவரத்தினைத் தூண்ட முயற்சி

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மீதான இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

இன்று  மட்டு-ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த மதகுரு ஒரு வன்முறையாளராக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டன் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ் பிரதேசங்களில் ஓரு ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளக்கூடியவாறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகத்தின் மத்தியில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் நேற்று அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

பன்குடாவெளி பகுதியில் நேற்று தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள்,செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மதகுருவினை பொறுத்தவரையில் கெவிழியாமடு பகுதியில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவம்,பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்,மட்டக்களப்பு கச்சேரியில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் என பல சம்பவங்கள் அவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றினையும் தாண்டி நேற்றைய தினம் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஓரு மதகுரு செயற்பட்டதையெண்ணிவெட்கி தலைகுனியவேண்டும்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர்.பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர்.ஆனால் இந்த மதகுருவைப்பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் ஒரு வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

இந்த மதகுருவானவர் வன்முறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்துவரும் நிலையில், சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஏனைய மத மதகுருக்கள் வன்முறைகளில் ஈடுபடும்போது பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு பௌத்த விகாரையில் கடமைபுரியும் மதகுருவினைப்பொறுத்தவரையில் அரச நிர்வாகத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் மீது இவ்வாறு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்திவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பன்குடாவெளியில் தொல்லியல் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறையில் பூட்டிவைத்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடாத்தப்பட்டபோதிலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.பொலிஸார் இருக்கும்போதே குறித்த தேரர் இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் ஏனைய அதிகாரிகள் அச்சம்கொள்ளும் நிலையும் உள்ளது.

இந்த மதகுருவினால் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவத்திற்கு ஜனாதிபதி அவர்கள் உரிய நடவடிக்கையெடுத்து சமூகத்தினையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதுகாக்ககூடியவாறு நடவடிக்கையெடுக்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version