பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நிச்சயம் கிடைக்கும் – தினேஸ் குணவர்தன

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு   1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்று வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலையின் நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பலசுற்று பேச்சுகளை நடத்தியிருந்தார். 950 ரூபாவரை இணக்கப்பாடுகள் பொதுத் தேர்தலுக்கு முன்னர் எட்டப்பட்டிருந்தன . அத்தருணத்திலேயே அமைச்சர் தொண்டமான் உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும் நாங்கள் நிச்சயம் 1000 ரூபா நாள் சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் என்றார்.