புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தடை – ‘அரசின் பிற்போக்கான நடவடிக்கை’ என அலன் கீனன் விமர்சனம்

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும்  பல தனிநபர்களையும் தடை செய்துள்ளது.

இந்நிலையில், இந்த சடவடிக்கை குறித்து தனது ட்விட்டரில்  பக்கத்தில்,  சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன்,

இலங்கை அரசு அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அறிவிக்கும் சட்டத்தை பயன்படுத்தி கடந்த மாதம் அரசியல்ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் அமைப்புகளை தடை செய்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள எவரும் அந்த அமைப்புகளுடன் தொடர்புகொள்வதை கூட ஆபத்தானதாக மாற்றியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பட்டியலில் 300க்கும் அதிகமானவர்களின் பெயர்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த பட்டியலில் ஐம்பது முஸ்லீம்களின் பெயர்கள் காணப்படுவதுடன் இவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வசிக்கும் 35 தமிழர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேசட்டத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் இதே தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்திருந்தது.

அந்த பட்டியலில் காணப்பட்ட சில பெயர்களும் விபரங்களும் தவறானவையாக காணப்பட்டன.உரிய ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை.

உலகின் ஏனைய அரசாங்கங்களை போல இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான பயங்கரவாதத்தில் ஈடுபட்ட எவரையும் தடுத்து வைத்து தண்டிப்பதற்கான உரிமையுள்ளது.

எனினும் எந்த குழுவிற்கும் தனிநபருக்கும் எதிரான தடைகளும் உரிய ஆதாரங்களினை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.

துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கம் தனது எதிராளிகளை தன்னை விமர்சிப்பவர்களை உரிய ஆதாரங்கள் இன்றி பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் வரலாற்றை கொண்டது.

அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி மீதான சமீபத்தைய தாக்குதல்களும் காவல்துறை  நீதித்துறை அரசியல்மயப்படுத்தப்பட்டமையும் சந்தேகம் மற்றும் எச்சரிக்கைக்கான காரணங்களாக காணப்படுகின்றன” என பதிவிட்டுள்ளார்.