சிறிலங்காவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்கெடுப்பு தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் அஞ்சல் மூல வாக்கெடுப்புகள் இடம்பெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த திகதி 24ம் மற்றும் 25ம் திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பல உள்ளுராட்சி மன்ற வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகள் தீர்க்கப்படாதுள்ளன. அவற்றின் தீர்ப்பு இம்மாதம் 21ம் திகதி வெளியாக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்தநிலையிலேயே அஞ்சல் வாக்களிப்புகள் பிற்போயுள்ளன. அதேநேரம் மே மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ள பிரதான வாக்களிப்பும் பிற்போடப்படும் சாத்தியங்கள் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை 21ம் திகதி, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான தீர்ப்பு கிடைக்கப்பெறுமாக இருந்தால், சம்மந்தப்பட்ட மன்றங்களில் பிரச்சார நடவடிக்கைகளுக்கு போதிய கால அவகாசம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த திகதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்குமான வாக்குப் பதிவுகளையும் ஒரே தினத்தில் நடத்திவிட வேண்டும் என்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.