Tamil News
Home செய்திகள் பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி தேசியத் தலைவரை முதலில் பேட்டி கண்ட மூத்த செய்தியாளர் ஆனந்தி

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி தேசியத் தலைவரை முதலில் பேட்டி கண்ட மூத்த செய்தியாளர் ஆனந்தி

லண்டனில் உள்ள சர்வதேச ஊடகம் ஒன்றின் மூத்த செய்தியாளர் ஆனந்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முதன்முதலாகச் சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் ஆவார்.

இவர் பிரபாகரனை சந்தித்தது பற்றி தனது கருத்தை தெரிவிக்கையில்,

லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத் திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி துருவித் துருவி விசாரித்தார்கள். தொடர்ந்து கண்காணித்தார்கள்.

அப்போது வவுனியா வரை மட்டுமே சிறிலங்கா படையினரின் ஆதிக்கம் இருந்தது. அதுவரை சென்றேன். அதன் பின்னர் புலிகளின் பகுதிக்குள் செல்வதற்கு பல தடைகள் இருந்தன. பின்னர் யாழ்ப்பாணம் சென்றேன். அங்கு தான் பிரபாகரன் இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன்.  நான் குளித்து ஆயத்தப்படுத்தி வரும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால், சுப.தமிழ்ச்செல்வன் உட்பட சில புலி உறுப்பினர்கள் நின்றார்கள்.

நான் வந்த தகவல் அவர்களுக்கு கிடைத்து விட்டது. என்னைப் பற்றி விசாரித்தார்கள்.

இதிலிருந்து ஒரு விடயம் எனக்கு தெளிவாகியது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்து விடுவார்கள் என்பதை அறிந்தேன்.

பிரபாகரனுடனான சந்திப்பு பற்றி கூறும் போது,

பிரபாகரனை அவரின் வீட்டில் சந்திக்கச் சென்றேன். வாசலில் நின்று அன்போடு வரவேற்றார்.

பலரும் நினைப்பது போல அவர் எப்போதும் சீரியஸான பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாகப் பழகுவார்.

எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக் கொடுத்தார். மிக அன்பான மனிதர்.

தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என விளக்குகினார்.

விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா – புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தான் போனேன்.

ஆனால், அவர் அங்கு கட்டி வைத்திருந்த செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பின்னர் எனக்குள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தாய், தந்தையரை, உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக அக்கறையுடன் அந்த இல்லத்தைப் பிரபாகரன் அமைத்திருந்தார். நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனிதனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்.

அந்த செஞ்சோலை இல்லத்தைக் கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு விட்டன.

வன்னியில் இருந்து திரும்பியதும், சர்வதேச தனியார் ஊடகத்தில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயிலில் நின்றேன்” என்று தான் தலைப்பிட்டேன்.

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரம் என்றே எனக்கு விளங்கும். அவரைச் சந்தித்த போது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூடக் கேட்க நினைத்தேன்.

ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்தக் கேள்வியே எழவில்லை.

புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்த போது, சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு. அது உண்மையல்ல.

போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசிய போது ஒரு தகவல் கிடைத்தது.

எப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொது மக்களை அடித்தால்கூட தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ? என்று தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.

அது மட்டுமல்ல, போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்.

அத்தோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின்படி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.

பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்பது உண்மை. எம்.ஜி.ஆர். இறந்த போது, ஈழமக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

அதேபோல இந்திரா காந்தி மறைந்த போதும் ஈழ மக்கள் மிகுந்த துயரடைந்தனர்.

தனது யாழ்ப்பாண பயணத்தில் தன்னை வியக்க வைத்த அம்சம் பற்றி கூறுகையில்,

பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு காலத் தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 இலட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத் தான்.

அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார்.

தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்கத் தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பற்றித்தான்.

அதன்படி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களை எல்லாம் கவனத்துடன் கணக்கு எடுத்தோம்.

பணப் பயிர்களைத் தடை செய்தோம். விதை நெற்களை சேமித்தோம். இயற்கை விவசாயத்திற்குப் பழகினோம்.

மேலும், எமது ஐந்து இலட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கு ஏற்றபடி பிற காய்கறி வகைகளையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்படித்தான் சந்திரிகாவின் கொடுமையான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்“ என்றனர்.

புலிகளை வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது.

புலிகள், விவசாயம், அமைப்பு, நிர்வாகம், கலை-பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் ஆனந்தி தெரிவித்திருந்தார்.

 

Exit mobile version