பத்திரிகையாளர் டேனியல் பியர்லை கொலை செய்த பயங்கரவாதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரத்தை அமெரிக்காவுக்கு வழங்கக்கோரி பாக்கிஸ்தானிடம் வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானில் 2002ல் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற அமெரிக்க பத்திரிகையில் பணியாற்றி வந்த டேனியல் பியர்ல் , பாக்கிஸ்தான் உளவுத் துறைக்கும் அல் – குவைதா பயங்கரவாத அமைப்பிற்கும் உள்ள தொடர்பை கண்டறிய ஆய்வு செய்து வந்தார். அப்போது அவரை பயங்கரவாதிகள் கடத்தி தலையை துண்டித்து கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.
உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரிட்டனைச் சேர்ந்த அல் – குவைதா தலைவர் அகமது உமர் சயீத் ஷேக் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஷேக்கிற்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் கடந்த ஆண்டு ஷேக்கை பாக்கிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டேனியலின் குடும்பத்தினர் பாக்கிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஷேக்கை விடுதலை செய்ய நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், “ பத்திரிகையாளர் டேனியல் பியர்லை கடத்தி கொலை செய்த குற்றவாளியை விடுதலை செய்து பாக்கிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்துஉள்ளோம்.
டேனியல் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடனின் புதிய நிர்வாகம் உறுதியாகஉள்ளது. ஷேக் உள்ளிட்ட பயங்கரவாதிகளை விடுவிக்கும் இதுபோன்ற முடிவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் துரோகம். அமெரிக்கரான பியர்லை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும். அதற்கான சட்ட வாய்ப்புகளைபரிசீலிக்க வேண்டும்” என்றார்.