பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: “இது போர் நடவடிக்கை”: பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் கருத்து

“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது.

“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில்,  மொத்தம் ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன” என்றும்  கூறப்பட்டுள்ளது. மேலும் “எங்கள் நடவடிக்கை கவனமிக்கது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது. பாகிஸ்தான் இராணுவ கட்டமைப்பு எதுவும் குறிவைக்கப்படவில்லை” என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின்  தாக்குதல்களுக்குப் பதிலளித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப்,   “எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்தத் தாக்குதலை “போர் நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், “இந்தப் போர் நடவடிக்கைக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.