Home செய்திகள் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற  தியாகதீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

பல்வேறு இடங்களில் இடம்பெற்ற  தியாகதீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

முல்லைத்தீவு

இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில்,
புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம்செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் வர்த்தகர்கள், பொது மக்கள், நலன் விரும்பிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார்

காலை 10.48மணியளவில் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வை தமிழ் தேசிய
வாழ்வுரிமை கட்சி ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வு அதன் தலைவர்
வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது தியாகதீபம் திலீபனின் படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றிமலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தபோராளிகளின் உறவுகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு 

bt பல்வேறு இடங்களில் இடம்பெற்ற  தியாகதீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின்
ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நிகழ்வுகள் மண்டூர் கணேசபுரம் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சாந்தன் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார், முன்னாள்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் பிரதேச சபைகளின்
தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவரினால் பிரதான நினைவுச் சுடரேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தோரால்
நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பருத்தித்துறை

பருத்தித்துறை மருதடி பகுதியில் உள்ள திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ளஇடத்தில் இந்நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து ஈகைச்சாவடைந்த நேரமான காலை 10.48 மணியளவில் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர்
ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் க.விக்னேஸ்வரன் மற்றும்
ஈபிஆர்எல்எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஈகைச்சுடர்ஏற்றியதைத் தொடர்ந்து, மூன்று மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு அளித்த தாயொருவர் தியாகதீபம் திலீபன் அவர்களுக்கு பொதுச் சுடரினை ஏற்றியிருந்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும்உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர்

12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தியாகச்சாவடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 32ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கட்சி பேதங்களைக் கடந்து மிகுந்த உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
நல்லூரில் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த இடத்திலேயே நிகழ்வுகள் இடம்பெற்றன. உண்ணாநோன்பு ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 10.45இற்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச் சுடரினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றியதைத் தொடர்ந்து
திரண்டிருந்த மக்கள் அனைவரும் மிகவும் உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
யாழ் மாநகரசபை முதல்வர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இதில் பங்கு கொண்டனர். நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

Exit mobile version