06. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88வது வயதில் இன்று (21) நித்திய இளைப்பாறினார்.
உரோம் நேரப்படி இன்று காலை 7.35 அளவில் அவர் காலமானதாக வத்திக்கான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
வத்திக்கானில் உள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் வைத்து அவர் இறைபதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 12 ஆண்டுகளாக பரிசுத்த பாப்பரசராக இறைபணியாற்றிய அவர், நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகளை நிறைவுற்று திரும்பியிருந்த நிலையில் அவர் இன்று நித்திய இளைப்பாறினார்.
இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைதி, இரக்கம், மனித நேயம் போன்றவற்றின் மீதான பாப்பரசரின் அர்ப்பணிப்பு உலகில் அசைக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவருடைய மறைவு நல்லுலகை விரும்புபவர்களுக்குப் பெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.