படகு மூலம் ஆயுதக்குழு ஒன்று தமிழகத்துக்கு ஊடுருவ முயற்சி? – கரையோரப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு

இலங்கையிலிருந்து ஆயுதகுழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என இந்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கிடைத்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐஎஎன்எஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மத்தியபுலனாய்வு முகவர் அமைப்பு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கன்யாகுமாரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பினையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆயுதங்கள் ஏந்தியவர்களுடன் படகொன்று இராமேஸ்வரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவர்கள் யார் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரங்களை தெரியவில்லை என புலனாய்வு பிரிவினர் ஐஎஎன்எஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை கிடைத்துள்ளது உண்மை ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என சென்னை பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கரையோர பகுதிகளிற்கு செல்லும் வீதிகளில் பொலிஸாரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்