Imrv – மனித உரிமைகள் அமைப்பு – Bremen மற்றும் Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகியன இணைந்து, 77975 Ringsheim (Bahnhof ) தொடருந்து நிலையம் முன்பாக, இன்று 18.06.2021 காலை 11.30 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளன.
ஜேர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடு கடத்தல் தொடர்பான முடிவுகளை இன்று பரிசீலிக்க உள்ள நிலையில் இப் போராட்டம் நடைபெறுகிறது. தயவுசெய்து முடிந்தவரையில் உறவுகள் கலந்துகொள்ளவும்.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மனித உரிமைகள் நிலமை தொடர்பாக காத்திரமான ஓர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீர்மானத்தில் ஒப்பம் இட்ட முக்கியமான நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. இருந்த போதும் இந்த ஆண்டு 30/3/2021 மற்றும் 9/6/2021 ஆகிய இரு திகதிகளில் ஈழத் தமிழ் அகதிகளை ஜேர்மன் அரசு இலங்கைக்கு நாடு கடத்திய பின்னணியில் Bremen மனித உரிமைகள் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஈழத் தமிழ் அகதிகள் ஜேர்மனியில் இருந்து நாடுகடத்தப்படுவதற்கு எதிராக Bremen மனித உரிமை அமைப்பு, சகோதர இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் விராஜ் மென்டிஸ் தலைமையில், ஜேர்மனி நாட்டு மக்களையும் உள்ளிணைத்து இப் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.