நளினி வேலூர் சிறையில் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையில் நளினி உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

7பேரையும் முன்கூட்டி விடுதலை செய்ய ஆளுநருக்கு சட்டப் பிரிவின் கீழ் பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

சிறையில் உள்ள 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் 7பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் வரவில்லை.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக நீடிக்கக் கோரி நளினி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் சிறையில் உள்ள முருகன் அறையில் இருந்து நவீனரக செல்போன், 2சிம், ஒரு ஹெட் செட் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக முருகன் மீது பாகாயம் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து அவருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் சிறையில் உள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

இதனை அடுத்து நேற்றுக் காலை உணவைத் தவிர்த்து உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ளார் என சிறை அதிகாரிகள் கூறினர். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.