நந்திக்கடல் பேசுகிறது´´ தமிழின வரலாற்று ஆவண நூல்வெளியீடும் தியாக தீபம் திலீபன் நினைவு வணக்க நிகழ்வும் நேற்று யேர்மனியின் Dortmund நகரில் நடைபெற்றது.
பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு – பிரேமன் ஐச் சேர்ந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள். தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.ஆனந்தராஜா ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.கனகேஸ்வரன் ஏற்றிவைத்தார். தொண்டு நிறுவன இயக்குநர் திரு.டயஸ் அவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மலர் மற்றும் சுடர் வணக்கம் நடைபெற்றது. செல்வி இலக்கியா அவர்களது தாயகப்பாடல் உணர்வுபூர்வமாக மேடையில் ஒலித்தமை அனைவரினதும் வரவேற்பைப்பெற்றது. செல்வி நிலா அவர்களது விடுதளை நடனமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்றது.
´´நந்திக்கடல் பேசுகிறது ´ எனும் நூல் தமிழினப் படுகொலையின் ஆவணங்களைச் சாட்சிகளூடாகத் தாங்கி வந்திருப்பதோடு மட்டுமன்றி, பின்போர்க்காலத்தின் விளைவுகளையும் தெளிவுபடுத்தி உரைக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இன அழிப்பின் பின்னர், இன அழிப்பின் நிகழ்கால நடைமுறைகள் பேசப்படாது தவறவிடப்பட்ட கடந்த பத்துஆண்டுகளைப் பேசுவதே இந்நூலின் முக்கியநோக்கமாகும், போராளிகள், பேராசிரியர்கள், கோட்பாட்டாளர்கள், தமிழ்/சிங்கள ஊடகவியலாளர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோர் ஆதாரங்களோடு பின்போர்க்காலத்தின் விளைவுகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, நந்திக்கடலில் குரலாக ஒலித்திருக்கிறார்கள்.
ஊடகவியலாளர் பாக்ஷண அபயவர்தன அவர்கள் ´நந்திக்கடல் பேசுகிறது´ நூலை வெளியிட்டு வைக்க, உறவுகள் பலர் மேடையில் நூலை அவரது கையால் பெற்றுக்கொண்டனர். குறித்த அளவில் பிரதிகள் அச்சிடப்பட்டமையால் பலருக்குப் பிரதிகள் கிடைக்கவில்லை என்பதன் அடிப்படையில் யேர்மனியில் வெவ்வேறு இடங்களில் வெகுவிரைவில் நந்திக்கடல் பேசவிருக்கிறது என்பதையும் அறியத்தருகின்றோம்.