தையிட்டி விகாரை விவகாரம் – இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விடுக்கப்பட்ட சவால்

‘தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்த காணியின் உரிமையாளர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட வேண்டும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

‘அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், தையிட்டி விகாரை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது’. இந்த கூட்டத்தில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ‘மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரையை இடிக்க கூடாது’ என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த கருத்தை நேற்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தை தலைவர் முரளிதரன், ‘வட மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் அவர் அறிந்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். ‘தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் இராமநாதன் அர்ச்சுனா பெரிய விளானில் இருப்பதாக கூறும் தமுது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா?’ என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்று காணப்படுகிறார்கள்’. ‘அவர்களுக்கு அர்ச்சுனாவால் காணியை கொடுக்க முடியுமா’? என்றும் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தை தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். ‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மண்டைதீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் பெற்றுக் கொடுக்கட்டும்’. ‘காணி தொடர்பான முழுமையான காணி விபரங்கள் அர்ச்சுனா உட்பட்ட எந்தவித பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கிடையாது’ என்றும் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தை தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.