Home செய்திகள் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி கே.எஸ்.ராதாகிருஸ்ணன்

தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி கே.எஸ்.ராதாகிருஸ்ணன்

தேசியத் தலைவர் அவர்களின் 65ஆவது பிறந்த நாளை உலகிலுள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் தலவர் இருந்த போது, தலைவருடன் நெருக்கமாக இருந்தவர்களில் திமுக செய்தித் தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஸ்ணனும் முக்கியமானவர்.

இவர் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான தமது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை 1979இலிருந்து அறிந்தவன். அந்தக் காலகட்டத்தில் பழ.நெடுமாறன், புலவர் புதுமைப்பித்தன் போன்ற பலர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சற்று பின்நோக்கிப் பார்க்கின்றேன்.

1982ஆம் ஆண்டு அப்போது எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பிரபாகரனை நான் முதலில் பாண்டிபஜாரில் சந்தித்தேன். அப்போது பிரபாகரனுடன் பேபி சுப்பிரமணியம், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் நேசன், செல்லக்கிளி  மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேல் ஆகியோர் உடன் இருப்பார்கள்.  இதன் பின் பிரபாகரன், நான் குடியிருந்த மயிலாப்பூர் 39, சாலை தெரு வீட்டில் தான் என்னுடன் தங்கியிருந்தார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் நெடுமாறன் தங்கியிருந்த அந்த வீட்டை எனக்கு தங்க இடமளித்தார்.

Rathakrishnan தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி கே.எஸ்.ராதாகிருஸ்ணன்பாண்டிபஜாரில் 19.05.1982 அன்று ஓர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து பிரபாகரனை கைது செய்த பொலிசார் அவரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், வைகோ, சென்னை மத்திய சிறையில் இருந்த பிரபாகரனை பார்க்க வேண்டுமென சொன்ன போது, அவரிடம் இது குறித்து நான் தெரிவித்தேன். அதற்கு பிரபாகரன், “வைகோ அண்ணனை வரச் சொல்லுங்க, நானும் அவரைப் பாரக்கணும்“ என்றார். 24.06.1982 அன்று வைகோ சென்னை மத்திய சிறையில் இருந்த பிரபாகரனை காலை 11 மணிக்கு சந்தித்தார். நானும் உடனிருந்தேன்.

அப்போது வைகோ. “திமுக சார்பில் ஈழ விடுதலை மாநாடு இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சத்தியேந்திரன் நடத்துகின்றார். உங்களின் கருத்துக்களை அந்த மாநாட்டில் பிரதிபலிக்கிறேன்“ என்று சொல்லிவிட்டு அன்று மாலை இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் சென்று ஈழப் பிரச்சினை குறித்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

இதனிடையே பிரபாகரன் மற்றும் போராளிகளுக்கு 05.08.1982 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்தேன். நெடுமாறன் அவர்கள் இதற்கான முயற்சிகளிலும், மூத்த வழக்கறிஞர் என்.டிவான்மாமலை அவர்களை சந்திக்கவும் பணிகளை மேற்கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் -6.08.1982 அன்று பிரபாகரனுக்கு பிணை கிடைத்தது. ஆனால் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனால் மதுரையில் உள்ள பழ.நெடுமாறனின் விவேகானந்தர் அச்சகத்தின் எதிரில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தார்.

இதேவேளை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக அக்கறை காட்டினார். பயிற்சி முகாம் நடத்தவும் உரிய உதவிகளையும் அவர் செய்ததுண்டு. நெடுமாறனுடைய நண்பர் திண்டுக்கல் அழகிரிசாமி தன்னுடைய சிறுமலை எஸ்டேற் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் கூட தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை பயிற்சிக்காக தேடினோம். இதற்காக அந்த வட்டாரத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டிருந்தோம்.

பிரபாகரனையும் ஈழப் போராளிகளையும் இலங்கையிட் ஒப்படைக்கக்கூடாது என்று அனைத்து கட்சிக் கூட்டத்தை 29.06.1982 அன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இல்ல வளாகத்தில் (அரசினர் தோட்டம்) பழ.நெடுமாறன் கூட்டி தீர்மானத்தோடு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, அடியேன் உடன் சென்றேன். அது மட்டுமல்ல முன்னாள் பிரதமர் சந்திரசேகர், எல்.கே.அத்வானி, தேவிலால், ஃபரூக் அப்துல்லா(காஷ்மீர் முன்னாள் முதல்வர்), இராம் விலாஸ் பஸ்வான், தினேஸ் கோஸ்வாமி(ஏஜிபி – அஸ்ஸாம்), தீபன் கோஷ் (சிபிஎம்), சிட்டபாசு (பார்வார்டு பிளாக்), பனத்வாலா (முஸ்லி் லீக்), சந்திரஜித் யாதவ், தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிர்லா போன்ற தலைவர்களையும் இது குறித்து சந்தித்தோம்.

இந்தக் காலகட்டத்தில் பிரபாகரனை தினமும், வாரத்திற்கு அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நான் சந்திப்பேன்.  அவர் டெல்லியிலிருந்து 04.08.1987 அன்று சுதுமலை செல்லும் வரை தொடர்ந்தது. இந்த சுதுமலை கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் எனது தலைமையின் கீழ் கூடி நேப்பியர் பாலம் அருகில் உள்ள பெரியார் சிலையின் கீழ் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை எரித்தோம்.

12.09.1988இல் கிட்டு அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போதும் பிரபாகரன், “அவரைப் போய் உடனே சந்தியுங்கள்“ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இப்படி பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கூறமுடியும். இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஸ்ணன் பதிவு செய்துள்ளார்.

 

 

 

Exit mobile version