திருச்சி மத்திய சிறையில் 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களது உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 104 பேர் தற்போது உள்ளனர்.
சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டவிரோதமாக வெளி நாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி குறித்த ஈழத்தமிழர்கள் போரா ட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று எட்டாவது நாளாகியும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் ஈழத்தில் உள்ள இவர்களது உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
திருச்சி சிறையில் உள்ள செபமாலை அருள்வசந்தன் வயது 44 என்பவருடை உறவுகள் யாழ்ப்பாணம் நவாலி கிழக்கில் உள்ள தமது இல்லத்தில் இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.