தலைமன்னாரில் ‘கெளரவமான அரசியல் தீர்வைக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போராட்டம்

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 41 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் அதன் இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) தலைமன்னார் கிராமம் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த செயல் திட்டத்தில் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.

இதேவேளை குறித்த நிகழ்வில் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.