Home செய்திகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் முன்னாள் இனவாத சிங்கள அரச தலைவர்கள் தீவிரம்

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் முன்னாள் இனவாத சிங்கள அரச தலைவர்கள் தீவிரம்

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

09 ஏப்ரல் 2019 இல் மேற்கொண்ட விஜயத்தை அடுத்து இப்போதே  யாழ். விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது சந்திரிகா, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் தெல்லிப்பளை, சங்கானை போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி, பளை ஆகிய இடங்களுக்கும் செல்லும் சந்திரிகா, பளையிலுள்ள இராஜேஸ்வரி மண்டவத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும், கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழலை மீண்டும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு தேர்தல் பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளிநொச்சி இரணைமடு பகுதிக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உட்பட பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தில் 4ஆயிரம் மில்லியன்களைப் பெற்றுள்ளனர். ஆனால் என்ன செய்தனர்.

கிளிநொச்சியில் எங்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியைவிட சொல்லும் அளவிற்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. சஜித் பிரேமதாசாவும் ஏமாற்றுகிறார். இதற்குள் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டுக்களவாணியாக உள்ளனர்.

நாம் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் எங்களுடைய காலத்தில் போன்று அபிவிருத்திகளைக் கொண்டு வருவோம். முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு, மாற்று வலுவுள்ளோர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மேம்பாடு என்பவற்றுடன் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பலப்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமான உரம், உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு போன்ற மக்களின் அன்றாட தேவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.

அதேசயம் முதல் முறை ஜனாதிபதியாக வந்து தமிழ் மக்களுக்கு இவற்றையெல்லாம் கொடுத்திருக்கலாம். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து பிரயோசனம் இல்லை.

Mahi Kilinoch தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் முன்னாள் இனவாத சிங்கள அரச தலைவர்கள் தீவிரம்தமிழ் மக்கள் உங்களின் ஆட்சிக் காலத்தை மறந்து விடவில்லை. உங்கள் ஆட்சியில் நீங்கள் மேற்கொண்ட இனப்படுகொலையின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. புனர்வாழ்வு பெற்றதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காரணமின்றி திடீரென சாவைத் தழுவிக் கொள்கின்றனர். இதற்கு தங்கள் அரசாங்கம் இதுவரை ஏதாவது பதிலை கூறியதா?

இப்படியிருக்கும் போது மீண்டும் தமிழர்கள் ஒரு பிழையை விடமாட்டார்கள். உங்களை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றி மீண்டும் எமது இளைஞர்களையும், மக்களையும் பலிகொடுக்க நாம் விரும்பவில்லை என மகிந்தாவின் கிளிநொச்சி வரவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள், யாழ்ப்பாணத்தில் நிற்கும் சந்திரிக்கா நவாலித் தேவாலையத்தில் தன்னால் படுகொலை செய்யப்பட்ட 165 தமிழ் மக்களின் படுகொலைக்கும் கடத்திச் செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட 600 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கும் பொறுப்பேற்று அனைத்துலக நீதிமன்றத்தில் சரணடையத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version