தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தவறு விட்டிருந்தாலும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தத் தவறை நிவர்த்தி செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை தேவை என்றும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், ஒரு கொள்கையின் அடிப்படையில் பயணிக்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இம்முறை தேர்தல், வெற்றியைத் தந்துள்ளது என்பதைக் காட்டிலும் தமிழ் கட்சிகளுக்கு ஓர் சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது என்றே கூற வேண்டும்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று கூற முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு சற்று வாக்கு குறைந்துள்ளதே தவிர, அவர்களுக்கான ஆதரவு தற்போதும் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் உள்ளது. செல்வாக்கு இல்லாமல் இருந்த தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களைப் பெற்றதன் பின்னர் தற்போதும் செல்வாக்கு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செல்வாக்கு அவர்களது அரசியல் கதவுகளைத் திறந்துள்ளது. எனவே தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும்.
தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பிலேயே சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்தெரிவித்துள்ளார்.