தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை : ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை என்றும் விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றது.
‘இங்கு சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்ற போது, சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுவதாக பொலிசாரோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய ஏனைய தரப்பினரோ போலிக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது நாட்டில் ஆட்சிபீடத்திலுள்ள அரசும், அரசுத்தலைவரும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமெனக் கூறுகின்றனர்’.

‘நாமும் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றே தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்’.
‘ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு சீரின்றியே காணப்படுகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசார் மீதே நாம் குற்றச்சாட்டு முன்வைக்க வேண்டியுள்ளது’.
‘பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் உள்ளிட்ட, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன’.
‘விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களோ எவையும் இருக்கவில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.